பப்ளிக் எக்ஸாம் முடித்த மாணவர்கள் போல் பேனா மை தெளித்து விளையாடலாம்.. ஆனால் போராடலாமா?
தமிழக அமைச்சர்கள் பேனாவை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் நாளை மறுநாள் பேனா மை தெளித்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னை: பேனா மையை வாக்களித்த மக்களின் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் நாளை மறுநாள் பேனா மை தெளித்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
அறிஞர் அண்ணாவின் பேனாவுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது படைப்புகள் இருந்தன. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக வாக்காளர்கள் தங்கள் ஆட்காட்டி விரலில் மை வைத்து கொண்டனர்.
அந்த வகையில் அவர்களால் தேர்ந்தெடுத்த அரசின் அமைச்சர்கள் தங்கள் பேனா மையை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் வரும் திங்கள்கிழமை அண்ணா சமாதியிலிருந்து தலைமை செயலகம் வரை பேனா மை தெளித்து போராட்டம் நடத்தப்படும்.
அதேபோல் தமிழக மக்களுக்கு தேவையில்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்த சென்னை பிரஸ் கிளப் முன்பு பத்திரிகையாளர்களக்கு பேனா வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.