மேட்டூர் அணைக்குள் இறங்கி ஆய்வு செய்த காவிரி வல்லுநர் குழு ! பவானி சாகரையும் பார்வையிட்டது!!
சென்னை: உச்சநீதிமன்றம் அமைத்த காவிரி மத்திய வல்லுநர் குழு மேட்டூர் அணைக்குள் இறங்கி ஆய்வு நடத்தியது. அதேபோல் பவானிசாகர் அணையிலும் இக்குழு பார்வையிட்டது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், காவிரி நதிப் படுகை அணைகளைப் பார்வையிடுவதற்காக காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவை அமைக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது
இக்குழுவினர் கர்நாடகத்தில் உள்ள காவிரி நதிப் படுகை பாசனப் பகுதிகளை 2-ஆவது நாளாக நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று இரவு சேலத்துக்கு காவிரி மத்திய குழு வருகை தந்தது.
இன்று காலை இக்குழுவினரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கான காவிரி நீர் தேவை குறித்த மனுவை காவிரி குழுவிடம் அவர் கொடுத்தார்.
தமிழக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய இந்த குழுவினர் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை இக்குழு ஆய்வு செய்தது.
மேட்டூர் அணைக்குள் இறங்கிய இக்குழுவினர் நீர்மட்ட அளவை கணக்கிட்டனர். மேலும் இக்குழுவினரை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தும் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பவானிசாகர் அணையையும் காவிரி தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.