ஜாமீனில் அம்மா: தாடி அமைச்சர்கள் மொட்டைக்கு மாறினர்!!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறை சென்றதால் சோகத்தில் முதல்வரும் அமைச்சர்களும் தாடி வளர்த்தனர். இப்போது ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி போயஸ்கார்டன் திரும்பியுள்ளதால், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.
சிறப்பு பூஜைகள்
இதனால் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம், திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், காவடி, அலகு குத்தி நேர்த்தி கடன், முளைப்பாரி ஊர்வலம், தேர் இழுத்தல், முடி காணிக்கை தேவாலயங்களில் பிரார்த்தனை என பல்வேறு வழிகளில் அ.தி.மு.க.வினர் வேண்டுதலில் ஈடுபட்டனர்.
தாடியில் அமைச்சர்கள்
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாடியுடன் காணப்பட்டனர்.
ஜாமீனில் விடுதலை
இந்த நிலையில் 21 நாள் சிறையில் இருந்த ஜெயலலிதா கடந்த 18-ஆம்தேதி ஜாமீனில் விடுதலையானார். ஆனால் அதன் பிறகும் பல அமைச்சர்கள் தாடியை எடுக்காமல் இருந்தனர்.
திருப்பதியில் மொட்டை
இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி கொண்டாடாமல் திருப்பதி சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார்.
மொட்டை அமைச்சர்கள்
இதே போல் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அமைச்சர் ஆனந்தன் தாடியை எடுத்துள்ளார். இதே போல் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கோவில்களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த உள்ளனர்.