விரைவில் அமைச்சர்களின் பதவி பறிபோய் மாமியார் வீட்டிற்கு செல்வார்கள்: டிடிவி தினகரன்
சென்னை: இன்னும் சில நாட்களில் அனைத்து அமைச்சர்களின் பதவியும் பறிபோகப் போகிறது. அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு அல்ல மாமியார் வீட்டிற்கு(சிறை) தான் செல்வார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அமைச்சர்கள்
அமைச்சர்கள் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்து கிடந்தவர்கள் இன்று அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
தன்னை முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் எடப்பாடி எப்படி தமிழக மக்களுக்கு நன்றியோடு இருப்பார்.
காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் அமர்ந்த இருக்கையில் விதிவசத்தால் நாங்கள் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்துள்ளோம். தற்போது ஜெயலலிதாவின் ஆட்சிக்கே அவர் துரோகம் செய்வதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டி உள்ளது.
ஊழல்
எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள். ஏன் ஓ. பன்னீர்செல்வமும் சேகர்ரெட்டியுடன் தொடர்பில் இருந்து பணம் வசூலித்தவர். அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன.
பதவி
ஆட்சி நடத்தும் தகுதியை இழந்துவிட்டதால் தற்போது வேறு வழியில்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். நான் மீண்டும் சிறைக்கு போகப் போகிறேன் என்று கூறுகிறார்கள். உண்மையில் இன்னும் சில நாட்களில் அனைத்து அமைச்சர்களின் பதவியும் பறிபோகப் போகிறது. அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு அல்ல மாமியார் வீட்டிற்கு(சிறை) தான் செல்வார்கள்.
சிறை
நான் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை, எந்த ஊழலும் செய்யவில்லை. நான் பல முறை மாமியார் வீட்டிற்கு சென்று வந்தவன். வழக்குகளை வென்று வந்தவன். ஆனால் ஆட்சியில் உள்ளவர்களின் பதவி பறிபோனால் மாமியார் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் எது எதையோ பேசுகிறார்கள் என்றார் தினகரன்.