கத்திரி "கவுண்டிங்" ஸ்டார்ட்.... நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் நாளை கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் துவங்குகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலம் வந்தாலே மக்களின் மனதில் கவலை வந்துவிடுகிறது. இந்த ஆண்டு வெயில் எவ்வளவு இருக்கப் போகிறதோ, எப்படி தாங்கப் போகிறமோ என்ற பயம் வந்துவிடுகிறது.
இருப்பினும் கோடை காலத்ததை சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.
கோடை
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அவ்வப்போது சென்ச்சுரி அடித்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல், ஊட்டி
கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் கொடைக்கானல், ஊட்டி என்று மலைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கொடைக்கானல் மற்றும் ஊட்டி மக்கள் கூட்டத்தால் திணறி வருகிறது.
அக்னி நட்சத்திரம்
கோடை காலத்தில் மக்கள் அதிகம் பயப்படுவது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்திற்கு தான். அந்த அக்னி நட்சத்திர காலத்தில் சூரியனின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
நாளை
தமிழக மக்கள் எதை நினைத்து பயந்தார்களோ அந்த அக்னி நட்சத்திர காலம் நாளை துவங்குகிறது. நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து 26 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் தான்.
அனல் காற்று
அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்று வீசும். இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குவார்கள். குளிர்பானங்கள், குளிர்ச்சியூட்டும் பழங்களை உண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்க முயல்வார்கள்.
கோடை மழை
இந்த ஆண்டு கோடை காலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து மக்கள் மனதை குளிர வைத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை விட சென்னையில் குறைந்த அளவே மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.