8 மணிநேர ஷிப்ட்... வார விடுமுறை... சங்கம்... போஸ்டர் ஒட்டி போலீஸ் கோரிக்கை
காவல்துறை மானியக்கோரிக்கையின் போது முதல்வரிடம் குடும்பத்துடன் மனு அளிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை: மனஅழுத்தம், பணிச்சுமையின்றி இயல்பாக வாழ முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கலாம் வாருங்கள் என காவல்துறையிருக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணி நேர வேலை, தீபாவளி, பொங்கல் ஆகிய முக்கிய விழாக்களில் கூட தங்கள் மனைவி, மக்கள் மற்றும் உறவினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.
8 மணிநேர ஷிப்ட்... வார விடுமுறை... சங்கம்... போஸ்டர் ஒட்டி போலீஸ் கோரிக்கை https://t.co/T7Gb327fVq #Police pic.twitter.com/vSuaury6Va
— Oneindia Tamil (@thatsTamil) June 23, 2017
குறைவான சம்பளம், அதிக பணி சுமையால் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கின்றனர். கூடுதல் பணிச்சுமையினால் பலர் நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
இப்பிரச்னைகளை எல்லாம் வெகுநாட்களாக, தங்களுக்குள்ளேயேப் போட்டு புழுங்கி வந்த காவல் துறை அதிகாரிகள், தற்போது துணிந்து, வருகிற ஜூலை 6ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, குடும்பத்துடன் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றனர்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து காவல்துறை குடும்பத்தினரும்,இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் போஸ்டர் அடித்து அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
•வருடம் முழுவதும் 200 நாட்கள் பணிபுரியும் பிற அரசு துறையினருக்கும், வருடம் 365 நாட்களும், 24 மணிநேரமும் பணிபுரியும் காவல் துறையினருக்கும் உள்ள ஊதியத்தை முறைப்படுத்தி, கூடுதலாக வழங்குதல்.
•ஒவ்வொரு காவலர்களுக்கும் 8 மணிநேர பணிமுறையை உறுதிசெய்தல்
•வாரத்தில் ஒருநாள் காவல்துறையினர், தங்கள் வீட்டிலுள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க விடுமுறையை உறுதிசெய்தல்
•காவலர்களுக்கு பணியில் ஏற்படும் அழுத்தங்களைத் தவிர்க்க, மன நலம் சார்ந்த பயிற்சி வகுப்புகளை ஊக்குவித்தல், காவலர் நலச்சங்கம் அமைக்க அனுமதி தருதல்
• உயர் காவல் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு, மற்ற காவலர்களைப் பயன்படுத்தும்'ஆர்டர்லி' முறையை ஒழித்தல்.
• காவலர் சங்கம் அமைக்க அனுமதி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல்துறை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
• காவல்துறை மானியக்கோரிக்கை நடைபெறும் ஜூலை 6ஆம் தேதி சட்டசபையில் முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்க காவலர்கள் குடும்பத்துடன் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
• இந்த பரபரப்பான போஸ்டர் ஒட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே கிழிக்கப்பட்டது. இந்த போஸ்டர் பல்வேறு போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ்-அப் குரூப்களிலும், சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த போஸ்டர் பற்றிய விபரம் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.