மெரினாவில் போராட்டம் நடத்த போலீசார் திட்டம்... வாட்ஸ் அப் ‘அறிக்கை’யால் பரபரப்பு
போலீசார் தங்களது கோரிக்கைகளுக்காக மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: தமிழக போலீசார் தங்களது கோரிக்கைகளுக்காக மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு துறைகளில் போலீஸ் துறை மட்டுமே சங்கம் இல்லாமல் உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும், அதிகாரிகளின் வீட்டில் 'ஆர்டலி' முறையை ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற போலீசார் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் குடும்பத்துடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் தலைமை செயலகம் மட்டுமன்றி, முதல்வரின் வீடு உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் தங்களது கோரிக்கைகளுக்காக மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது தொடர்பான 'அறிக்கை' என்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலாகியுள்ளது.
போலீசார் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லை
தமிழ்நாடு அனைத்து காவல் அலுவலர்கள் சார்பில் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "காவல் துறையினரும், அவரது குடும்பத்தினரும் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கை கழுவும் அதிகாரிகள் தான் உள்ளனர் என்பதை பல சம்பவங்கள் மூலம் நாடே அறியும்.
காவல் சங்கம் அவசியம்
இதனை ஒழிக்க காவல் சங்கம் அவசியம் என்பதை அரசும், அதிகாரிகளும் அறிந்தது ஒன்றே. காவல் சங்கம் அமைக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஏன் அரசு, காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி வழங்க மறுக்கிறது. சங்கம் அமைத்தால் ஆர்டலி முறை ஒழியும். எனவே அரசு இதன் மீது கவனம் கொண்டு காவலர் சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.
போலீஸ் குறைகள் முதல்வருக்கு தெரியாது
தமிழக முதல்வருக்கு எங்களது குறைகள் தெரியாது. காவல் துறை உயர் அதிகாரிகள் சலுகைகள் என்ற பெயரில் கண்துடைப்பு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சலுகையினால் எங்களுக்கு எந்த பயனுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் மெரினாவில் போராட்டம்
இந்த கோரிக்கைகளுக்காக நாங்களே மெரினா கடற்கரையில் ஒன்று கூடி போராட்டத்தில் குதிக்க உள்ளோம். ஆர்டலிகளை ஒழித்தால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 காவலர்கள், 3000 வாகனங்கள் மிச்சமாகும். எரிபொருள் மிச்சமாகும். எங்களுக்கு உடனடியாக சங்கம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு குரல் கொடுக்கிறோம்.
உளவுத்துறையினரும் ஆதரவு
சங்கம் கிடைக்காவிட்டால் போராட்டம் உறுதி. இதற்கு எங்களுக்கு தமிழ்நாடு எல்லையில் உள்ள மற்ற மாநில காவலர் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு உளவுத் துறையில் பணிபுரிபவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.