கோவை மார்க்சிஸ்ட் அலுவலக தாக்குதல்.. மதவாத சக்திகளை விரட்டியடிக்க வேல்முருகன் வலியுறுத்தல்!
கோவையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: கோவை மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கோவை மாநகரின் மத்தியப் பகுதியான காந்திநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் உள்ளது. இதன் மீது இன்று அதிகாலை 6 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அதிஷ்டவசமாக இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அலுவலகத்தின் முன் நின்ற காரும், பெயர்பலகையும் சற்று சேதமடைந்திருக்கிறது.
எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இந்த காந்திநகர பகுதியலேயே இப்படியொரு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்றால் இதை மறைமுகமாக, மர்ம நபர்கள் தொடுத்த தாக்குதல் என்று சொல்ல முடியாது. துணிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மதவாத சக்திகளின் பின்னணி
நாட்டிற்குப் பேராபத்தாய் இன்று தலைதூக்கியிருக்கும் மதவாதத்தை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது, முன்னணியிலும் நிற்கிறது. அதனால் மதவாத சக்திகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
பேராபத்தின் அச்சாரம்
கோவையில் சத்ரபதி சிவாஜி விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் இந்தத் தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. இந்தத் தாக்குதலை ஒரு அச்சுறுத்தும் நிகழ்ச்சியாக, மிரட்டும் முயற்சியாகப் பார்க்க வேண்டியதில்லை. பின்னர் ஏற்படப்போகும் பேராபத்தின் அச்சாரமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒட்டிக்கொண்டுள்ள புல்லுறுவிகள்
அந்த வகையில், இதனை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராக வேண்டும் என்று அவர்களை அறைகூவி அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.அதே நேரம் இந்தத் தாக்குதலைத் தொடுத்த மதவாதக் கும்பலை தமிழ்ச் சமூகத்தில் ஒட்டிக் கொண்டுள்ள புல்லுருவிகளாகவே பார்க்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
வளர்ச்சிக்கு கேடு
எனவே தமிழ்ச் சமூக "வளர்ச்சி"க்குக் கேடாக இருக்கும் இந்தக் குற்றவாளிகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாகவே மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி, என வேல்முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.