ராகு கேது பெயர்ச்சியும்... சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பும்...
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலை யில், அனைத்து கட்சிகளும், கூட்டணி முயற்சிகளில் தீவிரம் காட்டாமல் இருப்பதற்கு காரணம், ஜனவரியில் நிகழவிருக்கும் ராகு - கேது பெயர்ச்சி தான் என, அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரிக்குப் பின்பே கூட்டணி பற்றி அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும் கிரகங்கள் ஆவார்கள். ராகுவுக்கு நேர் எதிரில் 7ஆம் இடத்தில் 180 டிகிரியில் கேது பயணிப்பார். இவ்விரு கிரகங்களின் பெயர்ச்சியும் ஒரே நேரத்தில் ஆகும்.
ஜாதகத்தில் இவர்களில் ஒருவர் நல்ல இடத்தில் சஞ்சரிக்கும்போது இன்னொருவர் கெட்ட இடத்தில் சஞ்சரிக்கும் நிலை அமைவது இயற்கை. இருவரின் சஞ்சாரமுமே சிலருக்கு சிறப்பாக அமையாமல் போவதும் உண்டு. என்றாலும் தாங்கள் அமர்ந்த நட்சத்திர அடிப்படையில், நட்சத்திர அதிபனின் பலத்தை ஒட்டி நற்பலன்களைத் தருவார்கள்.
வாக்கிய மன்மத வருடம்,மார்கழி, 23ம் நாள், ஜனவரி 8, வெள்ளிக்கிழமை நாளிகை, 15, பகல் 12:37 மணிக்கு, ராகு பகவான் உத்திர நட்சத்திரம் பாகம், 4, கன்னியா ராசியில் இருந்து, உத்திர நட்சத்திரம், 1ம் பாகம் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். கேது பகவானும் அதே நாளில், அதே நேரத்தில், பூரட்டாதி நட்சத்திரம், 4ம் பாகம் மீன ராசியில் இருந்து, பூரட்டாதி நட்சத்திரம், 3ம் பாகம், கும்ப ராசியில்பிரவேசிக்கிறார்.
ராகு கேது பெயர்ச்சி
அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே பலமுடிவுகளை எடுக்கின்றனர். கடவுளை நம்பாத தலைவர்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக பரிகாத பூஜைகள், ஜோதிட ஆலோசனைகளை செய்து வருகின்றனர். பொதுவாகவே கிரகப் பெயர்ச்சிக்கும், அரசியலுக்கும் தொடர்பு உண்டு.
தேர்தல் வெற்றிக்கு தொடர்பு
ஜோதிடத்தைப் பொறுத்தவரை, கிரகங்களில் சனி, குருவுக்கு அடுத்தபடியாக, ராகு, கேது நிலைகள் முக்கியமானவை. குறிப்பாக ராகு, கேது பகவானைப் பொறுத்தவரையில், அவைகளின் பெயர்ச்சிக்கும் தேர்தலுக்கும் தொடர்பு உண்டு. ஜாதகக் கட்டங்களில், இந்த இரண்டு பகவான்களின் நிலைகளோடு, அவைகளின் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பொறுத்தே, தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்படுகிறது.
சிம்மராசிக்காரர்களுக்கு
சிம்மராசியில் ராகு சஞ்சரிக்கப் போவது அந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் . சூரியன் வீட்டில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, சிம்மராசிக்காரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் ஜோதிடர்கள். மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் முக்கியப் பிரச்சினைகளுக்கு முடிவுஎடுக்க முடியாமல் திணறுவீர்கள். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் என்றும் சிம்மராசிக்காரர்களுக்கு ஜோதிடர்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்களை கூறியுள்ளனர்.
அரசியல் முடிவுகள்
ராகு கேது பெயர்ச்சிக்கு முன் செய்கிற காரியங்கள் விருத்தி அடைவதில்லை என, ஜாதக ரீதியாக பலன்கள் கூறப்படுகின்றன. அதனால்தான், ராகு - கேது பெயர்ச்சியை மையமாக வைத்து, அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கூட்டணி அறிவிப்பு எப்போது
குறிப்பாக, அரசியல் நிகழ்வுகள் அனைத்தும், ராகு - கேது நிலைகளைப் பொறுத்தே அமைகின்றன. 18 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் ராகு - கேது பெயர்ச்சி, 2016 ஜனவரி 8ல் நடக்கிறது. அதனால்தான் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சட்டசபை தேர்தல் கூட்டணி சம்பந்தமாக, எந்த முடிவும் எடுக்காமலும் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் சாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக்கு விருப்பம்
அ.தி.மு.க.,வை எதிர்க்க கூட்டணி அவசியம் என, தி.மு.க., தலைவர் கருதினாலும், கூட்டணி தேர்தலுக்கு மட்டுமல்ல... ஆட்சியும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைவரும் வலியுறுத்தவே, தனித்தே போட்டியிட, பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார். மார்க்கெட்டிங் அரசியல் தமிழகத்திற்கு சரிப்பட்டு வராது என்று கருணாநிதி கூறி வருகிறார்.
விஜயகாந்த் மனநிலை
தே.மு.தி.க.வை கூட்டணியில் இணைக்க காங்கிரஸ். பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை முயற்சி செய்கின்றனர். ஆனால் விஜயகாந்தோ யாருடன் கூட்டணி என்று ஜனவரியில் அறிவிப்பேன் என்று கூறி வருகிறார். இதற்கு காரணம் ஜோதிடர்களின் ஆலோசனைதானாம். 2016 ஜனவரியில் ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின்னர் நிச்சயம் அணி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.