தமிழக அரசியலின் மைய அச்சு முறிந்தது!
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் மூலம் தமிழக அரசியலின் மைய அச்சு ஒன்று முறிந்துள்ளது.
சென்னை: தமிழக அரசியலின் மைய அச்சாக திகழ்ந்து வந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஜெயலலிதா ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அசாதாரணமானது. ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை பலமுறை எதிர்ப்பாளர்கள் குறி வைத்தபோதும் சற்றும் கலங்காமல் லாவகமாக எதிர்கொண்ட இரும்புப் பெண் ஜெயலலிதா.
தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் மையமாக வைத்துத்தான் மொத்த அரசியலும் இயங்கி வந்தது. இந்த இருவரையும் தவிர்த்த அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்று அந்த மைய அச்சு முறிந்து போய் விட்டது.
தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அதிமுகவை அவர் எதிர்கொண்ட விதம், அக்கட்சியை தன் வசப்படுத்திய லாவகம், துணிச்சலான அரசியல் பாதையை யாரும் எதிர்பார்க்க முடியாது.
கட்சியின் சீனியர்கள் மூலமாக வந்த கடுமையான சவால்களையும், போர்களையும் அவர் சந்தித்த விதம், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு சந்தேகமே இல்லாமல் ஜெயலலிதாதான் என்பதை நிரூபித்தது.
இரட்டை இலை இல்லாமல் சேவல் சின்னத்தில் அவர் கணிசமான எம்.எல்.ஏக்களைப் பெற்று தான் ஒரு சக்தி என்பதை நிரூபித்தார். அதன் பிறகு அதிமுக ஒன்று சேர்ந்த பிறகு ஒட்டுமொத்த அதிமுகவினருக்கும் தாயாராக மாறிப் போனவர் ஜெயலலிதா.
அதன் பிறகு அவருக்கு எல்லாவற்றிலும் ஏற்றம்தான். இடையில் அடுத்தடுத்து பல வழக்குகளைச் சந்தித்தபோதும் கூட எதிலுமே அவர் கலங்கியதில்லை. ஒவ்வொரு வழக்காக உடைத்து உடைத்து கடைசியில் மிகப் பெரிய சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தும் வெளி வந்தார் ஜெயலலிதா.
ஒவ்வொரு சவாலையும் அவர் சந்தோஷமாக எதிர்கொண்டார். ஒவ்வொரு வெற்றியையும் பூரிப்போடு பார்த்தார். பெருமிதத்தோடு அதை தனது தொண்டர்களுக்கு சமர்ப்பித்தார்.
கட்சியின் ஒவ்வொரு தலைவரையைும், தொண்டர்களையும் அவர் கட்டுப்படுத்திய விதம், நடத்திய விதம், வழி நடத்திய விதம், அதிமுகவை ராணுவக் கட்டுக்கோப்புடன் நடத்திய விதம்... யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
சர்ச்சைகள் ஒரு பக்கம் மலையாக உயர்ந்து நின்ற போதிலும், மாற்றுக் கருத்துக்கள் சரமாரியாக எழுந்து வந்தபோதும் கூட, ஜெயலலிதா நிச்சயம் இந்திய அரசியலில் மறக்க முடியாத, உயர்ந்த தலைவர் என்பதில் சந்தேகமே இல்லை என்பதுதான் அசைக்க முடியாத உண்மை.