ரேஷன் விற்பனை ஊழியர் இளங்கோ தற்கொலை... நீதி விசாரணை கோரும் ஊழியர்கள்
சென்னை: தமிழகம் முழுதும் உள்ள ரேசன் கடைகள் அனைத்தையும் இன்று மூடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் ரேசன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டை சேர்ந்தவர் இளங்கோ, 50. இவர், எண்ணுார் ஜே.ஜே., நகரில் உள்ள, வடசென்னை கூட்டுறவு சங்கமான, 'நாம்கோ' ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்தார்.அத்திப்பட்டில், மனைவி உமா, மகளுடன் வசித்த இளங்கோ, கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியிடம் இருந்து பிரிந்து, வண்ணாரப்பேட்டையில் உள்ள தம்பி கவுதம் வீட்டில், மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இளங்கோ பணிபுரியும் ரேஷன் கடையில், கூட்டுறவு சங்க அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, உணவு பொருட்கள் இருப்பு குறைந்ததை கண்டுபிடித்தனர். மேலும், மண்ணெண்ணெய்க்கு, 10 பேர் பெயர்களில் ரசீது இருந்தன. ஆனால், ஐந்து பேருக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, அதிகாரிகள் கேட்டபோது, இளங்கோ, சரியான பதில் அளிக்கவில்லை. இதனால், இளங்கோவை, அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்ததாக கூறப்படுகிறது.
தூக்குப் போட்டு தற்கொலை
இதனால், மன உளைச்சல் அடைந்த இளங்கோ, வியாழக்கிழமையன்று, மதியம், 1:00 மணிக்கு, கடையில் இருந்து வீடு திரும்பிய போது, யாரிடமும் பேசவில்லை. உறவினர்கள் அனைவரும் வெளியே சென்றதும், இளங்கோ, மின் விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளங்கோவின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையறிந்த, 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள், ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் அவரது வீட்டு முன் குவிந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தற்கொலை கடிதத்தில் புகார்
இளங்கோ சடலத்தை சோதனை செய்த போது, அவரின் சட்டை பையில், கடிதம் ஒன்று இருந்தது. அதில், எண்ணுார் ஜே.ஜே., நகர் ரேஷன் கடைக்கு, அதிகாரி பாபு உள்ளிட்ட பலர் வந்து, கடுமையான கஷ்டத்தை கொடுத்தனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல்நிலை வேறு சரியில்லை. கடந்த, 20ஆம் தேதி, என் கடைக்கு வந்த துணை பதிவாளர், இணை பதிவாளர், அதிகாரி பாண்டியன், செல்லையா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். கடந்த, 32 ஆண்டுகள் பணிக்காலத்தில், இதுபோன்று நடந்ததே இல்லை. என் மன உளைச்சலுக்கு, அவர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து உணவுத்துறை அமைச்சர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன.
நடவடிக்கை தேவை
இது தொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த நியாய விலைக் கடை பணியாளர் சங்க தலைவர் சக்திவேல், ரேசன் கடை விற்பனையாளர் இளங்கோவின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
35000 ரேசன்கடைகள் ஸ்டிரைக்
இதனிடையே தமிழகம் முழுதும் உள்ள 35 ஆயிரம் ரேசன் கடைகள் இன்று மூடி போராட்டம் நடத்தும் ஊழியர்கள், தற்கொலை செய்து கொண்ட இளங்கோவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.