அப்துல் கலாமின் "முதல்" பிறந்த நாள்... கண்ணீருடன் நினைவு கூர்ந்த தமிழக மக்கள்...!
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் 84வது பிறந்த நாளை தமிழக மக்கள் அத்தனை பேரும் கண்ணீருடன் நினைவு கூர்ந்தனர். இதுவரை அவரது பிறந்த நாளை இத்தனை நெகிழ்ச்சியாக தமிழகம் கொண்டாடியதில்லை என்பது இன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களால் உணர முடியும்.
கலாமின் 84வது பிறந்த நாள் விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதை பிறந்த நாள் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரை நினைவு கூறும் உருக்கமான நாளாக மாறிப் போயிருந்தது.
கலாம் மறைந்த பின்னர் வந்துள்ள முதல் பிறந்த நாள் விழா என்பதால் இன்று மக்கள் கண்ணீருடன் இந்த பிறந்த நாளை கொண்டாடினர்.
அலுவலகங்கள்.. பள்ளி.. கல்லூரிகள்
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பிற இடங்கள் என எங்கு பார்த்தாலும் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ஆளுநரின் மலர் அஞ்சலி
ஆளுநர் கே. ரோசய்யா, ராஜ்பாவனில் நடந்த நிகழ்ச்சியில் கலாம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மாணவர் அறக்கட்டளையைத் தொடங்க வைத்து பரிசுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்.
ஊர்வலங்கள்
தமிழகம் முழுவதும் இன்று இளைஞர் எழுச்சி நாள் பேரணிகளை மாணவ மாணவியர் நடத்தினர். மாநில அரசு சார்பில் நடந்த இவற்றில் பலரும் கலந்து கொண்டனர். சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லி இதைத் தொடங்கி வைத்தார்.
கண்காட்சிகள்
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
மரக்கன்றுகள்
தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர் மரக் கன்றுகளையும் இன்று நட்டனர். பள்ளி கல்லூரி வளாகங்களிலும், பொது இடங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஏவுகணைத் தமிழன்
அதிமுகவும் கூட இன்று கலாமின் பிறந்த நாளைக் கொண்டாடியது. அதிமுகவின் ஏடான நமது எம்.ஜி.ஆர் இதழில் ஏவுகணைத் தமிழன் என்ற பெயரில் கவிதை இடம் பெற்றிருந்தது.
கட்சி பாகுபாடின்றி
கட்சி பாகுபாடின்றி அத்தனை கட்சியினரும் இன்று கலாம் பிறந்த நாளைக் கொண்டாடினர். திமுக, தேமுதிக, பாஜக, மதிமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் கலாம் பிறந்த நாளையொட்டி பல்வேறு விதமாக கொண்டாடினர்.