ஜல்லிக்கட்டுக்கு வாய்ப்பே இல்லை- கைவிரித்தது மத்திய பாஜக அரசு
ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பே இல்லை என கைவிரித்துவிட்டது மத்திய பாஜக அரசு. இது ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்துள்ள இளைஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சென்னை: நடப்பாண்டில் ஜல்லிக்கட்டுக்கு வாய்ப்பே கிடையாது என மத்திய பாஜக அரசு கைவிரித்துவிட்டது. இது தமிழகத்தில் புரட்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
தமிழினத்தின் பண்பாட்டு உரிமை ஜல்லிக்கட்டு. இதை மிருகவதை என்ற பெயரால் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இத்தடையை நீக்கி தமிழரின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்ட தமிழக இளைஞர்களும் மாணவர்களும் புரட்சியில் இறங்கியுள்ளனர்.
அலங்காநல்லூரில் 4 நாட்களாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் 3 நாட்களாக, மதுரை, கோவை, சேலம், நெல்லை மைதானங்களில் தொடர்ந்தும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது; அவசர சட்டம் கொண்டுவர முடியாது என மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கையை விரித்து விட்டது. இது ஜல்லிக்கட்டுக்கான புரட்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இனி தமிழ்நாடு அரசுதான் ஜல்லிக்கட்டுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.