இவ்வளவு வெயில் அடிக்க என்ன காரணம் தெரியுமா?.. மரத்தையெல்லாம் வெட்டி அழித்ததுதானாம்!
சென்னை: தமிழகத்தில் மக்களை வாட்டி எடுக்கும் வெயில் அதிகரிப்புக்கு மரங்கள் குறைந்து போனதே காரணம் என்று சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களும் வெயில் அதிகமாக இருக்கும். மே மாதம் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும்.
மே மாதத்துக்கு பின்னர் வெயிலின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கும்.
வாட்டி வதைக்கும் வெயில்:
ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை காலத்தையும் மிஞ்சும் வகையில், சூரியன் சுட்டெரிக்கிறது. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே வெயில் வாட்டி எடுக்கிறது.
வியர்வை மழையில் மக்கள்:
இதனால் பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வெளியில் சுற்றுபவர்களின் நிலைமை பரிதாபமாகவே உள்ளது. வியர்வை மழையில் நனைந்தபடியே அவர்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பம்:
சென்னையில் கடந்த 2 நாட்களாக 35 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாகவே வெயில் பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 35.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகி உள்ளது.
மரங்கள் இல்லாததே காரணம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்காக நன்கு வளர்ந்த பசுமையான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதே நேரத்தில் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப்புகையும் வான்வெளியை கடுமையாக பாதிக்கிறது. இதுபோன்ற காரணங்களாலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
பசுமையை இழக்கும் சென்னை:
இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு மரங்கள் குறைந்து போனதே முக்கிய காரணமாகும். பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
நீராவிப் போக்கே இல்லை:
மரங்கள் அதிகமாக இருந்ததால்தான் நீராவி போக்கு அதிகமாக இருக்கும். இன்று அதுவும் குறைந்து விட்டது. நீராவி போக்கே வெயிலின் தாக்கத்தை
குறைக்கும் வகையில் மழையை ஏற்படுத்தும்.
மாடிகளில் மரம் வளருங்கள்:
எனவே வருங்காலங்களில் மாடிகளில் பசுமையான சிறிய மரங்களை வளர்த்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறையும்" என்று தெரிவித்தார்.