டிச. 19 முதல் வேலை நிறுத்தம்- அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நோட்டீஸ்!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்து கழகங்களில் 1.43 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது.
இதன்படி 11வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. இதன் பின்னர் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் மாற்று நடவடிக்கையாக இடைக்கால நிவாரணமும் வழங்கவில்லை. இந்த கோரிக்கைகளை முன்வைத்து மண்டல வாரியாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. இதனால் இறுதியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்துள்ளனர். திருச்சியில் கடந்த 2-ந் தேதி 11 தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் சென்னையில் போக்குவரத்துக் கழக இயக்குநரகத்தில் இன்று பிற்பகல், சிஐடியு மற்றும் எல்பிஎப் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பதற்கான முறைப்படியான நோட்டீஸை கொடுத்துள்ளனர்.
அதில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னையை தீர்க்காவிடில் டிசம்பர் 19ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.