தமிழகத்துக்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி விரைவில் நியமனம்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விரைவில் மாற்றப்பட்டு புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஏற்கனவே இங்கு சட்டசபை பொதுத்தேர்தல், இடைத் தேர்தல்களை நடத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஒரேகட்டமாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலையும் அவர் நடத்தினார்.
தேர்தலுக்கு முந்தைய நாளில் 144 தடை உத்தரவை அவர் பிறப்பித்தார். இது ஆளும் கட்சி தவிர, மற்ற அனைத்துக் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. இந்த தடை உத்தரவை ஆளும்கட்சியினர் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்ததாக, மற்ற எல்லா கட்சிகளுமே பிரவீன்குமாரை குற்றம் சாட்டின.
இது அவரை சோர்வுறச் செய்தது. எனவே வேறு பணிக்கு செல்லும் வகையில் தன்னை தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்தை கடந்த சில மாதத்துக்கு முன்பு பிரவீன்குமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் இசைவு தெரிவித்தது. எனவே அடுத்ததாக அந்த இடத்தில் நியமிக்கப்படும் நபரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.
இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டபடி, தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரும், உரிய பணிமூப்பு பெற்றவருமான 3 பெயர்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. தற்போது அதில் ஒருவரை தேர்வு செய்யும் நடவடிக்கை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்தவாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே, பிரவீன்குமார் வேறு பதவிக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.