கட்சிகளின் போராட்ட கூத்துக்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை.. இளைஞர்கள் கொடுத்த சம்மட்டி அடி!
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், இளைஞர்களின் இடைவிடாத அறவழி கிளர்ச்சி கண்டு அலறிப் போய்கிடக்கின்றன.
சென்னை: உரிமை சார்ந்த போராட்டங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என பழம் தின்று கொட்டை போட்ட, பனங்காட்டு நரிகளின் சலசலப்புக்கு அஞ்சாத தமிழகத்து அரசியல் கட்சிகளெல்லாம் இன்று இளைஞர் சக்திகளிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்கவே அரசியல் கட்சிகள் பிறப்பெடுத்ததாக கூறிக் கொள்வது வழக்கம். அத்தகைய உரிமைகளுக்கு ஆபத்து நேரும் போது ஆக்ரோஷ அறிக்கைகளை விடாத அரசியல் தலைவர்களே இல்லை. உடனடியாக போராட்ட அறிவிப்புகளை வெளியிடாத கட்சிகளும் இல்லை.
இந்த போராட்டங்கள் என்பவை கூடி கலைந்துபோகிற கூத்தாகவே நடத்தப்பட்டு வந்தன.. 'ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்... தமிழர் உரிமைக்கான போர்ப்பாட்டு இது போர்ப்பாட்டு' என்ற பஞ்ச் முழக்கங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
பணிய வைக்காத போராட்டங்கள்
உண்ணாவிரதப் போராட்டம் என்றால் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை என காலநேரத்தை இவர்களே தீர்மானித்து உட்கார்ந்து எழுந்து போய்விடுவார்கள்.. அடுத்த பிரச்சனை வந்தால் உடனே மீண்டும் போராட்டம்தான்... ஆனால் அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் அரசுகளை பணிய வைத்த சரித்திரம் என்பதை அண்மைக்காலத்தில் ஏதும் இல்லை.
தலைகீழ் புரட்சி
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இளைஞர்கள், மாணவர்கள் போராடினால் எதிர்க்கட்சிகள் கபளீகரம் செய்வதும் ஆளும் கட்சிகள் அதை கலைப்பதுமாகத்தான் இருந்து வந்தன. இப்போது ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் காட்சிகளையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள் மாணவர்கள், இளைஞர்கள்.
சம்மட்டி அடி
சமூக வலைதளங்களில் குடியேறியிருக்கும் சோம்பிகளாக சாடப்பட்டவர்கள் மாணவர்கள், இளைஞர்கள். அந்த கூட்டம்தான் இப்போது 'போராட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என அரசியல் கட்சிகளின் செவுளில் அறைந்து சம்மட்டி கொடுத்து வருகிறது. வீரியத்தை விட காரியமே முக்கியமே என அமைதிவழி அறப்போராட்டத்தை ஆயுதமாக கையிலெடுத்திருக்கிறார்கள்.
வீதியில் இளங்காளையர்...
அலங்காநல்லூரிலும் சென்னை மெரினாவிலும் மதுரை நெல்லை கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மைதானங்களும் சாலைகளும்தான் இப்போது போர்க்களங்கள்.. குறிப்பிட்ட இடத்தில் போய் ஆர்ப்பாட்டமும் போர்ப்பாட்டும் பாடி வருவதற்கு அரசாங்கத்திடம் கெஞ்சி கொண்டிருக்கவில்லை இந்த இளைஞர் கூட்டம். அரசாங்கங்களின் குலைநடுங்க வைத்து அரியாசனத்தில் இருந்து இறங்கி வீதிக்கு வரவழைத்திருக்கிறது இந்த பயமறியா இளங்காளையர் கூட்டம்.
அறவழி கிளர்ச்சி
மைதானங்களில் சுற்றி வளைத்து குண்டாந்தடிகளால் காவல்துறை தாக்கினால் உயிர்போவது உறுதிதான்... ஆனால் அதற்காக ஓடிப் போய் ஒளிந்துகொள்ளாமல் செத்தாலும் சாவோம்... உரிமையை மீட்காமல் ஓயமாட்டோம் என ஓர்மத்துடன் அர்ப்பணிப்புடன் அமர்ந்திருக்கிறார்கள் தியாகப் பெருமக்கள். இப்படித்தான் போராட்டம் நடத்த வேண்டும்... இப்படி நடத்தினால்தான் கோரிக்கைகளை மீட்க முடியும் என அமைதிவழி கிளர்ச்சியில் லட்சோப லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
இனியும் வேடமிட முடியாது
அரசியல் கட்சிகளின் அடையாள போராட்ட கூத்துகளுக்கு இன்றைய இளைய சமூகம் கொடுத்திருப்பது சம்மட்டி அடி... எங்களுக்கு போராட தெரியும்... உங்க ஆதரவு வேண்டாம் என ஒருநாள் போராட்ட கூத்து நடத்தும் அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டியடிக்கிறார்கள் இப்பெரும் தியாக கூட்டத்தினர்... இனி தமிழகத்தின் உரிமை சார்ந்த போராட்டங்களில் அரசியல் கட்சிகள் வேடம் போட்டு வேடிக்கை காட்ட முடியாது... ஏனெனில் இளங்காளையர் நடத்தி வருவது உரிமை வேள்வி... இது பெருநெருப்பு... உங்கள் மாய்மால ஆட்டங்கள் இதில் சாம்பலாகிப் போய்விடும்!!