குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு- 4,033 பேர் “பாஸ்”!
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள இந்த முடிவுகளின்படி 4 ஆயிரத்து 33 பேர் முதன்மைத் தேர்வினை எழுத தகுதி படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், "குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8ல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர்.
இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு 4 ஆயிரத்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இதைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
இதேபோன்று உதவி புள்ளியியல் ஆய்வாளர், நூலகர், உதவி நூலகர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. புள்ளியியல் பணிக்கு 54 பேரும், நூலகர் பணிக்கு 71 பேரும் தாற்காலிமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.