மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ்சில் திடீர் தீ.... குதித்து உயிர் தப்பிய பயணிகள்
மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்தில் திடீரென தீ பற்றியது. இதில் பயணிகள் எந்த பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.
சென்னை: மேல்மருவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலையில் பேருந்து கிளம்பியது. மேல் மருவத்தூர் பேருந்து நிறுத்தம் வந்த போது எஞ்சினில் புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினர்.
பேருந்தை சற்று தள்ளி நிறுத்துவதற்கு முயற்சி செய்த போது தீ மளமளவென பிடித்தது பேருந்து எரிந்தது. இதனால் டிரைவர் உள்ளிட்ட பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து தப்பினர்.
அச்சிறுப்பாக்கத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் தப்பினர்.