ஜல்லிக்கட்டு போல நீட் தேர்வுக்கும் அவசரச்சட்டம் - தமிழக அரசு முடிவு
ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க அவசரச்சட்டம் இயற்றப்பட்டது போல நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும் அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க அவசரச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவால் ஜல்லிகட்டு நடத்த தடை உருவானபோது தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதனால் தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான 'நீட்' காரணமாக மாநில பாடத்திட்டத்தில் பயின்ற தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
நீட் தேர்வு தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் நடப்புக் கல்வியாண்டு அல்லது ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு சட்டம், சுகாதாரம், மனிதவள மேம்பாடு ஆகிய அமைச்சகங்கள் அனுமதி அளிக்க மறுத்து விட்டன.
இதை சமாளிக்க, அவசரச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரால் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் அவசரச் சட்டம் ஓரிரு நாட்களில் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சகங்களுக்கு அனுப்பி அவற்றின் அனுமதியை பெற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம். இதன் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகம், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை செய்யும். எனினும், இது நிரந்தரச் சட்டம் இல்லை என்பதால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை எனக் கருதப்படுகிறது.