போயஸ் தோட்டம் ஒரு தரம்.. 2 தரம்..3 தரம்.. விரைவில்!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளன.
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை விரைவில் ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 100 கோடி அபராதத் தொகையை கோர்ட் வசூலிக்கவுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லாததால் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத் தொகை நிறுத்தி வைக்கப்படவில்லை. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
ஜெயலலிதா தவிர்த்து மற்ற மூவருக்கும் அதாவது சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 130 கோடியை கோர்ட் வசூலிக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களை விற்று, அதாவது ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அபராதத் தொகை வசூலிக்கப்படவுள்ளது. தற்போது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளன. ஆனால் இதை விற்றால் ரூ.100 கோடி தேறாது. எனவே மேலும் பல சொத்துக்களை விற்றாக வேண்டும்.
ஜெயலலிதாவிடம் உள்ள சில சொத்துக்கள் குறித்த பட்டியல். தமிழக அரசு இவற்றை ஏலத்தில் விட்டு பணத்தை வசூல் செய்து பெங்களூர் தனி கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும்.
- 750 ஜோடி செருப்புகள் - மதிப்பு தெரியவில்லை
- 10,500 சேலைகள் - மதிப்பு தெரியவில்லை
- தங்க நகைகள் - சுமாராக ரூ. 3.5 கோடி.
- 500 ஒயின் கோப்பைகள் - மதிப்பு தெரியவில்லை
- வைர நகைகள் - ரூ 1 கோடி.
- போயஸ் கார்டன் வீடு
- கொடநாடு டீ எஸ்டேட்
- சிறுதாவூர் பங்களா - மதிப்பு ரூ. 55 கோடி
- பையனூர் பங்களா - ரூ. 13 லட்சத்திற்கு வாங்கப்பட்டது
இதுவிர மேலும் பலசொத்துக்கள் உள்ளன. இதில் எவை எவை ஏலத்திற்கு வரும் என்று தெரியவில்லை.