ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு,,, 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாடு முழுவதும் இன்று, குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தாண்டு 980 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதில் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல்நிலைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 74 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள தேர்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று எழுதுகின்றனர்.
தேர்வு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை நடந்த முதல் நிலைத் தேர்வின் முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையில் மீண்டும் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழக தேர்வு மையங்களில் முறையான வசதிகள் செய்யப்படாத நிலை உள்ளதாகவும், அதனால் தேர்வு எழுதுவதில் சிரமங்களை சந்திக்க நேர்வதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.