“ஆபரேஷன் திரிசூலம்” வெற்றியைக் கொண்டாடும்... தேசிய கடற்படை தினம் இன்று!
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களை மூழ்கடித்த, ஆபரேஷன் திரிசூலத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படு
சென்னை: தேசிய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
இந்திய படைகளுள் மிக முக்கியமான ஒன்று கடற்படை. நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுடன், இப்படை சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி தேசிய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் திரிசூலம்...
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது, ஆபரேஷன் திரிசூலம் மற்றும் மலைப்பாம்பு மூலம் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
மரியாதை..
இதையொட்டி, போர் நினைவிடங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அலோக் பட்நாகர்...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில்...
இதேபோல், கன்னியாகுமரியில் கடற்படை தினம், வானவேடிக்கைகளுடன் போர் கப்பலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக, ஐ.என்.எஸ் சட்லெஜ் போர்க்கப்பல் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
சுற்றுலாப் பயணிகள்...
அதில் இருந்தபடியே கடற்படையினர் நடத்திய வான வேடிக்கைகளை குமரிக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு களித்தனர். கொண்டாட்டத்திற்குபின் இந்த கப்பல் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி...
கடற்படை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.