முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் நிதியமைச்சர்... பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற வகையில் இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற வகையில் இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பால் வளத்துறையில், உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் பட்ஜெட்டில் கொடுத்துள்ளார் எனவும் அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
கடந்த 2015-2016ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 30.5லட்சம் லிட்டர் பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக அரசின் ஆவின் நிறுவனம் 2016-2017ம் நிதியாண்டில் சுமார் 41லட்சம் லிட்டர் பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதாக இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இது உண்மைக்கு புறம்பான "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்"
ஏனெனில் கடந்த 2015-2016ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 30.5லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாகவும், தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தோடு போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை ஓரளவுக்கு உயர்த்தி கொடுத்து வருவதாகவும், தனியார் பால் நிறுவனங்களோடு வணிகச் சந்தையில் ஈடு கொடுக்க முடியாததாலும் ஆவின் நிறுவனத்திற்கு வரக் கூடிய பாலின் கொள்முதல் நாளொன்றுக்கு சுமார் 24.5லட்சம் லிட்டராக குறைந்திருக்கிறது.
இந்த நிலையில் உண்மைக்கு புறம்பான தகவலை பட்ஜெட்டில் கொடுத்து பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.