இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
இன்று உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னையில் 2,500 வகையான இட்லிகளின் கண்காட்சி ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது.
சென்னை: வானத்துக்கு கீழ் உள்ள அனைத்துக்கும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் போது இட்லிக்கு மட்டும் கொண்டாடக் கூடாதா என்ன? ஆம் இன்று உலக இட்லி தினமாகும். அதையொட்டி 2,500 வகையான இட்லிகளின் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
கடந்த 2013-இல் இனியவன் என்பவர் 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். கோயமுத்தூரை சேர்ந்த பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இனியவன் ஆட்டோ டிரைவாக பணியாற்றி வந்தார். அப்போது ஒரு இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து அவர் கற்று கொண்ட தொழில் இன்று அவரை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளது.
மேலும் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நேற்று பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இட்லி வகைகளை பார்த்து ரசித்தனர்.
இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா என்ற சம்ஸ்கிருத பெயரே இட்லி என்றானது. 7-ஆவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி ஹுவாங் சுவான் இந்தியாவில் உள்ள அனைத்தையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் இட்லியை வேகவைக்க பயன்படுத்தும் இட்லி தட்டுகள் குறித்து அவர் குறிப்பேதும் தெரிவிக்கவில்லை.