நாடா புயல்.. அவசர உதவிகளுக்கு கட்டணமில்லா தொடர்பு எண் அறிவிப்பு - தமிழக அரசு
அவசர உதவிகளுக்கு 1070, 1077 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.
சென்னை: நாடா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு "நாடா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து புயல் எச்சரிக்கையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நிவாரண முகாம்களுக்கு சென்று மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசு அறிவுரை வழங்கி உள்ளது. அவசர உதவிகளுக்கு 1070, 1077 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.