வாகனதாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி... சுங்க சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு!
கரூர்: தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் (டோல்கேட்) நாளை முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதனால் ஆம்னி பேருந்து மற்றும் லாரி வாடகை கட்டணம் உயரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 41 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்க சாவடிகளில் தனியாரும் 12 சுங்க சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.
இந்த நிலையில், நாளை முதல் தமிழகத்தில் உள்ள சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைபுதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, சிட்டம்பட்டி பூதக்குடி, லெம்பலாக்குடி, லஷ்மிணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் ஆகிய 18 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதனால் மீண்டும் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார் கட்டணம் ரூ. 38 லிருந்து ரூ. 44 ஆகவும், லாரி ரூ. 139லிருந்து ரூ 155 ஆகவும் உயர்கிறது.
இந்த கட்டண உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும், பாமக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.