சுங்கக் கட்டணத்தை டிச.31 வரை வசூலிக்கக் கூடாது: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சுங்கக் கட்டணத்தை டிச.31 வரை வசூலிக்கக் கூடாது என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: சில்லறை தட்டுப்பாடு காரணமாக சுங்கக் கட்டணத்தை வரும் டிச. 31 வரை வசூலிக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
'கறுப்பு பணம் மீட்பு, கள்ள நோட்டு ஒழிப்பு போன்றவற்றுக்காக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு 22 நாட்கள் ஆன பிறகும்கூட பணத் தட்டுப்பாடு இன்னும் குறையவில்லை.
தற்போது வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுக்க தட்டுப்பாடு உள்ளது. இத்தகைய ஒரு கஷ்டமான சூழலில் டிசம்பர் 3-ம் தேதி முதல் சுங்க கட்டண வரியை மீண்டும் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.
சில்லறை தட்டுப்பாட்டால் சுங்கக் கட்டணம் செலுத்தும் இடங்களில் வாகன ஓட்டுநர்களுக்கும், சுங்க கட்டணம் வசூல் செய்பவர்களுக்கும் இடையே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த அநாவசியப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு வரும் 31-ம் தேதி வரை சுங்க கட்டணத்தை வசூல் செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்