அதிமுகவில் விதிகளை திருத்தி வழிகாட்டுதல் குழு? நாளை நிர்வாகிகள் கூட்டம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அதில் அணிகள் இணைய, கட்சி விதிகள் மாற்றம் நடைபெறும் என்றும் தகவல்கள் பரவியுள்ளன.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் அதிமுக சட்ட விதிகளை மாற்ற முடிவுகள் எடுக்கபப்டும் என்றும் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு விரிசல் ஏற்பட்டு இரண்டு, மூன்று அணிகளாக பிரிந்தன. பிரதானமாக உள்ள ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை திரை மறைவில் தினமும் நடைபெற்றது.
ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை நேற்று முன்தினம் ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவருடன் அமைச்சர்களும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவருடன் அவரது ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினர்.
இணைப்பு எதிர்பார்ப்பு
இவ்வாறு இரு அணிகளும் ஆலோசனை நடத்திய நேரத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள்
ஜெயலலிதா நினைவிடத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் அதிக அளவில் குவிந்தனர். கொட்டும் மழையில் குவிந்த அவர்களை ஒழுங்குபடுத்த, போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றதே தவிர எந்த முடிவும் எட்டப்படவில்லை.
5 மணி நேர காத்திருப்பு ஏமாற்றம்
இதனால், சாதகமான பதில் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். சுமார் 5 மணி நேரம் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அ.தி.மு.க. தொண்டர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம்
இந்நிலையில் நாளை அதிமுகவின் இரு அணிகளும் இணையலாம் என தகவல்கள் வெளியாகியது. தகவல்கள் வெளியாகிய இந்நிலையில், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது.
கட்சி விதிகளில் மாற்றம்
நாளை நடைபெறும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வழிகாட்டும் குழு அமைப்பு
தேர்தல் கமிஷன் கட்சி பெயர், சின்னம் முடக்கி வைத்ததை விலக்கிக் கொள்ள நடை முறைகளை மேற்கொள்ள காலஅவகாசம் பிடிக்கும். எனவே அதுவரை கட்சியை நடத்த வழிகாட்டும் குழு அமைத்து செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளைக்குள் அணிகள் இணையும்
இதற்கிடையே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நாளைக்குள் இரு அணிகள் இணைந்துவிடும், 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும், மக்களின் அன்பைப் பெறவும் இணைப்பு நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.