சென்னை, திருவள்ளூர்,காஞ்சி மாவட்டத்தில் சில அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளையும் விடுமுறை
சென்னை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழைக்கு சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியாமல் மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. சாலைகளில் குளம்போல தேங்கியுள்ள வெள்ளநீரினால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கனமழை பெய்து வருவதால் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையில் நாளையும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கொளத்தூர், நெசபாக்கம், சைதாபேட்டை, மடுவங்கரை, ஆயிரம் விளக்கு ,மேற்கு மாம்பலம், வேளச்சேரி, ஆர்.ஏ.புரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர், நாப்பாளையம், ஆவடி, முகப்பேரு கிழக்கு, முகப்பேர் மேற்கு,மணவாளநகர்,அயனபாக்கம்,புங்காத்தூர், சுப்பாரெட்டிபாளையம் பகுதிகளை சேர்ந்த 12 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இடையாத்தூர், இரும்புலிச்சேரி,மவுலிவாக்கம்,மாங்காடு,செம்மஞ்சேரி,திருமுடிவாக்கம்,கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
சென்னையில் பல பள்ளிகளில் இன்னும் தஞ்சமடைந்து தங்கியுள்ள மக்கள் வெளியேறாமல் உள்ளதாலும், வெள்ளநீர் வடியாததாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.