இயற்கையோடு நாம் சூழலியல் கருத்தரங்கு: சுவை மிகு மரபு உணவு விழா: 2 நாட்களுக்கு உண்டு மகிழ தனி ஏற்பாடு
இயற்கையோடு நாம் எனும் சூழலியல் கருத்தரங்கில் 2 நாட்களுக்கு சுவை மிகு உணவு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் வழியில் சாகுபடி செய்யப்பட்ட சிறுதானியங்களின் உணவு விருந்துக்கு தனி ஏற
சென்னை: 'காடு' என்ற சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கையோடு நாம் என்ற பெயரில் சூழலியல் கருத்தரங்கம் சென்னையில் வரும் 8 மற்றும் 9ம் தேதி நடைபெற உள்ளது.
சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவில், காதுக்கு மட்டுமல்ல; வாய்க்கும் சுவை மிகு சிறுதானிய உணவு அளிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்தரங்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் உணவுத் திருவிழா பற்றியும், விருந்தில் பரிமாறப்படும் உணவுகள் பற்றியும் பார்ப்போம்.
உணவின் சிறப்புகள்
உணவுத் திருவிழாவில் பரிமாறப்படும் அனைத்தும் இயற்கை வேளாண் முறையில் தயாரிக்கப்பட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைத்த உணவு வகைகள். உணவே மருந்து என்ற அடிப்படையில் நிகழ்ச்சிக்கு வருவோருக்கு அளித்து இன்புறவிருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
முதல் நாள் விருந்தில்..
ஜூலை 8ம் தேதி மாலை, வேப்பம்பூ சூப், சாமை முருக்கு, குமாயம், நாட்டுப் பப்பாளி - முளைக்கட்டிய பச்சைப் கலவை, கீரை வடை, மூங்கில் அரிசி பாயாசம், சிறுதானிய அடை, இஞ்சி, நெல்லிக்காய் தொவையல், சீரகச் சம்பா, பிரியாணி - வெங்காயம், வெள்ளரிக்காய் பச்சடி, வரகு இட்லி - ஆவரம்பூ சாம்பார், மாப்பிள்ளை சம்பா பனியாரம், வல்லாரை சட்னி, கத்திரிக்காய்- மொச்சை கூட்டு, குதிரைவாலி தயிர் சாதம் ஆகிய சுவை மிகு உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளது.
இரண்டாம் நாள் விருந்தில்..
ஜூலை 9ம் தேதி மணதக்காளி சூப், ஓலைப் பக்கோடா, தினை தொதல், மாதுளை - முளைக்கட்டிய கருப்பு உளுந்து கலவை, கீரை வடை, ராகி பாயாசம், சோள தோசை, புதினா - கொத்தமல்லி தொவையல், குதிரைவாலி பிரியாணி - வெங்காயம், வெள்ளரிக்காய் பச்சடி, வரகு இட்லி - ஆவரம்பூ சாம்பார், குள்ளக்கார் பணியாரம், நிலக்கடலை சட்னி, தட்டைப் பயிர் கூட்டு, சாமை தயிர் சாதம் என வகை வகையாய் காத்திருக்கிறது உண்டு மகிழ.
உணவிற்கான மதிப்பு
இரண்டு நாட்களுக்கும் நிகழ்ச்சிக்கு வருவோர் மனதார சுவைத்து மகிழும் உணவிற்கு கட்டணமாக பெரியவருக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாயும் சிறியவருக்கு 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஃபே முறையில் உணவு திருவிழா நடத்தப்படுவதால் விரும்புவோர் விரும்பிய உணவை தின்று சுவைக்கலாம்.
முன் பதிவுக்கு
உணவு திருவிழாவில் உண்டு மகிழ முன் பதிவை கட்டாயமாக்கி இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அதற்கான டிக்கெட்டுகளை இணையத்தில் https://www.panuval.com/iyarkayodu-nam-2017 பெறலாம். இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் செல்போனிலும் தொடர்பு கொண்டு முன்பதிவை செய்யலாம். அதற்கான எண்: 97890-09666, 89399-67179. நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்களை அறிய https://www.facebook.com/events/1464761950253667/ என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.