ஜெயலலிதா வர்றாங்க... டிராபிக்கை நிறுத்து.. கொட்டும் மழையில் பெரும் அவதிக்குள்ளான சென்னை மக்கள்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று சென்னை திரும்பியதும், விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வீடு வரைக்கும் கிட்டத்தட்ட ஊர்வலம் வருவது போல அழைத்து வரப்பட்டார். அவர் வந்த வழியெல்லாம் போக்குவரத்தை ஒருபக்கமாக திருப்பி விட்டதால், கொட்டும் மழை ஒருபக்கம், போக்குவரத்து நெரிசல் மறுபக்கம் என சென்னை மக்கள் விழி பிதுங்கிப் போய் விட்டனர்.
வீடுகளுக்குத் திரும்பியோர், தீபாவளிக்காக ஊர்களுக்குக் கிளம்பியோர் என பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி விட்டனர்.
நேற்று ஜாமீனில் விடுதலையான ஜெயலலிதா தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர். மேலும் விமான நிலையம் முதல் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு வரை பல்லாயிரக்கணக்கானோர் சாலையின் இரு மருங்கிலும் காலை முதலே திரண்டு காத்திருந்தனர்.
ஜெயலலிதா ஊர்வலம்
விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை ஜெயலலிதாவின் கார், அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்புக்கு மத்தியில் ஊர்ந்து ஊர்ந்து வந்தது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினர் திரண்டு வந்திருந்தனர். இவர்களை வேடிக்கைப் பார்க் பொதுமக்களும் கூடியதால் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.
போக்குவரத்து நிறுத்தம்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று மாலை, 3:15 மணிக்கு ஜெயலலிதா வெளியே வந்தார். பரப்பன அக்ரஹாராவில் இருந்து, எச்.ஏ.எல்., விமான நிலையம் வரையில், ஜெயலலிதாவை வரவேற்க, அ.தி.மு.க.,வினர் திரண்டிருந்தனர். சிறைச்சாலை முதல், விமான நிலையம் வரையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஜெயலலிதா கார் சிக்கல் இன்றி செல்ல, பெங்களூரு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
பலத்த வரவேற்பு
அதன் பின்னர் தனி விமானம் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் சென்னைக்குப் புறப்பட்டனர். விமானம் மாலை 5 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில் அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் சின்னையா, முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், கண்ணப்பன், நடிகர் ராமராஜன், எம்.எல்.ஏ.,க்கள் தன்சிங், பிரபாகரன், ராஜலட்சுமி, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., அருண்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வரவேற்றனர்.
கொட்டும் மழையில் அம்மா ஊர்வலம்
பின்னர் ஜெயலலிதாவின் கார் போயஸ் கார்டனுக்குக் கிளம்பியது. கிட்டத்தட்ட ஊர்வலம் போல இது இருந்தது. கொட்டும் மழையிலும், வழிநெடுகில் கட்சியினர் திரண்டிருந்ததால், போயஸ் கார்டனுக்கு சரியாக 6 மணிக்குப் போய்ச் சேர்ந்தது ஜெயலலிதா கார். அதாவது ஒரு மணி நேரம் இந்த "அம்மா ஊர்வலம்: நடந்தது
சாலையில் விழுந்து கும்பிட்ட தொண்டர்கள்
வழியில், மீனம்பாக்கம், ஆலந்துார், கிண்டி, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், கட்சியினர் திரண்டு நின்று, மலர் துாவி வரவேற்றனர். பலர் கார் முன்பு பாய்ந்தனர். அவர்களைத் தள்ளி விட்டனர் போலீஸார். பலர் சாலைகளில் கீழே விழுந்து கும்பிடவும் செய்தனர். பல இடங்களில் கார் மீது மலர்களைத் தூவினர்.
மழைக்கு மத்தியில்
கோட்டூர்புரம் காந்தி மண்டபம் பிரதான சாலையில், ஒரு அடி உயரத்திற்கு தேங்கி நின்ற மழை நீரில், தண்ணீரை கிழித்தபடி கார் சென்றது.
நகர முடியாமல் தவித்த வாகனங்கள்
ஏற்கனவே தொடர் மழை காரணமாக, வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில், ஜெயலலிதா வருகைக்காக, சைதாப்பேட்டை, வேளச்சேரி ஹால்டா சந்திப்பு, பூந்தமல்லி சாலை, கோயம்பேடு சாலை, பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அடையாறு சர்தார் படேல் சாலை முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அனைத்து போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது. மக்களால் இன்ச் அளவுக்குக் கூட நகர முடியாத நிலை ஏற்பட்டது.
முற்றிலும் நனைந்து போன மக்கள்
இதில் டூவீலர்களில் வந்தவர்களின் நிலைதான் பரிதாபம். நகர முடியாமல், கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்து போய் விட்டனர். ஜெயலலிதா வீடு போய்ச் சேர்ந்த பின்னர்தான் இவர்களால் நகரவே முடிந்தது. ஜெயலலிதாவின் கார் ஒரு மணி நேரம் பயணித்தது என்றால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்குப் பிறகே போக்குவரத்து சீரடைந்தது.
பேரவதி
ஜெயலலிதாவின் வருகையாலும், கொட்டும் மழையாலும் நேற்று மாலை சென்னைக்குள் வந்தவர்களும், சென்னையிலிருந்து வெளியேறியவர்களும் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.