ஜெ. பதவியேற்பு விழாவால் கடும் போக்குவரத்து நெரிசல்: நொந்து நூடுல்ஸான சென்னைவாசிகள்
சென்னை: ஜெயலலிதா பதவியேற்பு விழா காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெயலலிதா 6வது முறையாக நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவையொட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுகவினர் டிராவல்ஸ் வேன், கார், பேருந்துகளில் சென்னைக்கு வந்தனர்.
வெளிமாவட்ட அதிமுகவினர் சென்னையில் குவிந்ததால் ஜி.என்.செட்டி சாலை, கடற்கரை சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பதவியேற்பு விழா நடந்த சென்னை பல்கல்கலைக்கழகத்திக்கு எதிரே உள்ள மெரீனா கடற்கரையில் திரும்பிய பக்கம் எல்லாம் அதிமுகவினரின் வாகனங்களாக நின்றன.
பதவியேற்பு விழாவையொட்டி பேனர், கட்அவுட்டுகள் வைக்கப்படாததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நொந்து நூடுல்ஸாகிவிட்டனர்.
ஏற்கனவே, சென்னையில் வெயில் மண்டையை பிளக்கும்போது போக்குவரத்து நெரிசல் வேற என்று பலரும் அலுத்துக் கொண்டனர்.