ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை.. தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அருகில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை அருகில் அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 22ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சென்னை அப்போலோ மருத்துவமனை அருகில் கூட்டம் குவிந்த வண்ணம்தான் இருந்தது. இருந்தாலும், தொடக்கத்தில் இருந்த பரபரப்பு நாளடைவில் குறைந்தது.
இந்நிலையில், திடீரென நேற்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அதிமுக தொண்டர்களிடையே பதற்றம் ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனை முன்பு அதிக அளவில் குவியத் தொடங்கினர். இன்று காலையும் தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் கடுமையான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஊர்ந்துதான் செல்கின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க 2000 போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு, அந்த வழியாக அதிமுக தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.