2 பக்கமும் கட்சிக் கொடி, உடனே அகற்றுங்கள்.. போலீஸில் டிராபிக் ராமசாமி அதிரடி புகார்
சென்னை: சென்னை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு வந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சாலைகளில் கட்டப்பட்டுள்ள கட்சிக் கொடிகளை அகற்றக் கோரி போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேவதாஸைச் சந்தித்துப் பேசிய அவர் அவரிடம் ஒரு புகார் கொடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், செங்குன்றத்தில் சாலையின் இருபக்கமும் அதிமுக.வினரும், பாஜகவினரும் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் வைத்து உள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து புகாரைப் பெற்றுக் கொண்டு ரிசிப்ட் கொடுத்த போலீஸார், இந்த வேலையைச் செய்ய வேண்டியது பஞ்சாயத்து நிர்வாகம்தான். அவர்கள் அகற்றினால் நாங்கள் பாதுகாப்பு அளிக்கத் தயார் என்று தெரிவித்தனர்.
தற்போது பேரூராட்சி நிர்வாகம் ராமசாமியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி எடுக்காவிட்டால் பேரூராட்சி மீது ராமசாமி வழக்குத் தொடரலாம் என்றும் தெரிகிறது.