ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி, டாக்டர் பிரவீணா மனுக்கள் தள்ளுபடி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிட கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார்.
மேலும், மருத்துவமனையின் செய்திக் குறிப்புகளை மனுதாரர் பார்க்கவில்லையா? அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என்று மனுதாரருக்கு நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.
முதல்வர் உடல்நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோருவது சரியல்ல. தாற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நீதிபதி எஸ்.கே. கவுல் தெரிவித்தார். டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிட கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில் டாக்டர் பிரவீணா மனு தள்ளுபடி
இதேபோல முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரவீணா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்"அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையை கண்காணிக்க தமிழக அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு நெருங்கிய இருவர்கள், நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும்,வெளிநாட்டில் சென்று முதல்வருக்கு சிகிச்சையளிக்க வேண்டுமா என்பதை தெளிவு படுத்த வேண்டும், என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் ஆஜராகி குடிமக்கள் தேர்ந்தெடுத்து முதல்வரின் உடல்நிலை குறித்து குடிமக்கள் அறிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது. எனவே அவர் உடல்நிலை குறித்த அரசு சார்பில் விரிவான அறிக்கை வெளியிடப்படவில்லை. எனவே தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல்வருக்கு எந்த மருத்துவர்கள் என்ன சிகிச்சையளிக்க வேண்டும் என கூற உங்களுக்கு உரிமை கிடையாது, முதல்வருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எந்த மாதிரி அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்பதற்கும் எல்லை உள்ளது எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி செய்ப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரின் உடல்நிலைதொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.