ஆர்.கே.நகரில் ‘டிராபிக் ஜாம்’ ஏற்படுமா ?... ஸ்டாலினை சந்தித்தார் (டிராபிக்) ராமசாமி!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் ஆதரவு கோரினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். மற்ற கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் அறிவிக்க வில்லை.
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார் டிராபிக் ராமசாமி.
அப்போது, ‘சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கு திமுக ஆதரவு அளிக்க வேண்டும்' ஸ்டாலினிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்தப் பின்னரே ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.