சினிமாவிலே இருங்கள்.. அரசியல் எல்லாம் வேண்டாம்.. ரஜினிக்கு டிராபிக் ராமசாமி அட்வைஸ்!
திருப்பூர்: மக்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் ரஜினி. அப்போது ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி பேசிய பேச்சுக்கள், அவர் அரசியலுக்கு வரத் தயார் ஆகிவிட்டதாகவே தெரிகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்குவார்? அல்லது பாஜகவில் இணைவார்? என்பது தான் பட்டிதொட்டியெங்கும் பேச்சாக உள்ளது. ரஜினிகாந்துக்கு அனைத்துக் கட்சிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
இதனிடையே ரஜினியின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, மக்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நல்ல திறமையுள்ள ஜெயலலிதாவை சாகடித்து விட்டனர். தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சொல்கிறார். மொத்தத்தில், தற்போது இருப்பது மக்களுக்கான அரசே இல்லை.
ரஜினிகாந்த் தைரிய சாலியாக இருந்திருந்தால் எப்போதோ அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி சினிமாவோடு இருக்கட்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றார்.