டிச. 15வரை இங்கெல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் ஏற்கப்படும்!
சென்னை: வருகிற 15-ந்தேதி வரை ரயில், பஸ் டிக்கெட் கவுண்டர்கள், மருந்து கடைகள், மற்றும் மாநகரகாட்சி வரிகள் மின் கட்டணம் போன்றவற்றை பழைய ரூ.500 நோட்டுகளை மூலம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தது. இதனால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அவர்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்பதற்காக ஆஸ்பத்திரி, மருந்து கடை, பஸ், ரயில் விமான டிக்கெட் கவுண்டர்கள், பெட்ரோல் பங்க், மாநகராட்சி வரிகள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அவற்றை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் நீட்டிப்பு :
பழைய நோட்டுகள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாற்றிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 15-ந்தேதி வரை என நீட்டிக்கப்பட்டது. அதுவும் ரூ.500 பழைய நோட்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதனால் பொதுமக்கள் ரயில் நிலையங்கள், மருந்து கடைகள், சமையல் கியாஸ், பெட்ரோல் பங்க் மற்றும் சொத்து வரி உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு வரிகளை செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளை இதுவரையில் பயன்படுத்தி வந்தனர்.
திடீர் ரத்து:
இந்த நிலையில் பெட்ரோல் பங்க், விமான நிலையம், சுங்க சாவடிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் பழைய ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாது என்று திடீரென வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெட் ரோல் பங்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பழைய ரூ.500 நோட்டுகளை கொடுத்து பெட்ரோல், டீசல் போட முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம்:
இதுவரையில், சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும். 200 ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம். அதற்கு குறைவான கட்டணமாக இருந்தால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது.
பெட்ரோல் பங்க், விமான நிலையம், சுங்க சாவடிகளில் புதிய ரூ.500, ரூ.2000 குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளான 100, 50, 20, 10 ஆகியன வெள்ளிக்கிழமை முதல் வாங்கப்படும்.
டிசம்பர் 15-வரை பழைய 500 ரூபாய்:
அதே வேளையில் பழைய ரூ.500 நோட்டுகள் வருகிற 15-ந்தேதி வரை ரயில், பஸ் டிக்கெட் கவுண்டர்கள், மருந்து கடைகள், மற்றும் மாநகரகாட்சி வரிகள் மின் கட்டணம் போன்றவற்றை செலுத்தலாம். சமையல் கியாசுக்கும் அதனை பயன்படுத்தலாம். பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தும் இடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. சுங்க சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டு பிரச்சினை ஏற்படக் கூடும் என்பதால் ஸ்வைப் மிஷினும் வைக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டுகளை அவற்றில் பயன்படுத்தலாம்.
வருகிற 15-ந்தேதி வரை ரயில், பஸ் டிக்கெட் கவுண்டர்கள், மருந்து கடைகள், மற்றும் மாநகரகாட்சி வரிகள், மின் கட்டணம் போன்றவற்றை பழைய ரூ.500 நோட்டுகளை மூலம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.