மோடி திட்டத்தை வைத்து "பிராடு".. நாகர்கோவில் ரயில் நிலையத்தில்... விசாரணைக்கு கோரிக்கை!
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் துய்மை இந்தியா திட்டத்தை பயன்படுத்தி மிகவும் மோசமான முறையில் மக்களையும், பயணிகளையும், ரயில்வே துறையையும் ஏமாற்றி முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் ஈடுபட்ட நாகர்கோவில் ரயில் நிலைய தூய்மைப் பணிக்கான தனியார் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஊழல் கண்காணிப்பு போலீ்ஸ் மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மும்பை, பெங்களுர், மங்களுருக்கு தினசரி ரயில்களும், ராமேஸ்வரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் ரயிலும், புதுடில்லிக்கு வாரத்துக்கு இரண்டுநாள் ரயிலும், திப்ருகர், சென்னை, புதுச்சேரி,ஷாலிமர், காந்திதாம், ஹவுரா, புதுச்சேரி, காச்சுகுடா போன்ற இடங்களுக்கு வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இது தவிர திருவனந்தபுரம், கோவை, புனுலூர், திருநெல்வேலி, கோட்டையம், மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகிறது.
பிட்லைன் பராமரிப்பு
இவ்வாறு நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து பிட்லைன் முதல்நிலை பராமரிப்பு, பிட்லைன் இரண்டாம் நிலை பராமரிப்பு, ரயில் பெட்டிகளை பழுதுபார்த்தல், ரயில்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்தல் என பல்வேறு கட்ட பணிகள் நடைபெறுகிறது. நாகர்கோவில் பணிமனைக்கு வாரத்துக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்கு என தற்போது சுமார் 500 ரயில் பெட்டிகள் உள்ளது.
மகா மோசமான பராமரிப்பு
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்கள் பராமரிப்பு செய்யும் பிட்லைன்களை சுத்தப்படுத்த பணிகள், ரயில்களில் தண்ணீர் பிடித்து சுத்தம் செய்தல், ரயில்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தல் போன்ற சுத்தம் சுகாதாரம் சம்மந்தமான அணைத்து பணிகளையும் அவுட்சோர்ஸ் என்ற பெயரில் தனியாருக்கு ஒப்பந்தபுள்ளி வழங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தனியாரால் நடத்தப்படுகிற காரணத்தால் ரயில்கள் எந்தவித சுத்தமோ சுகாதாரமோ இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது.
அதிகாரிகளுக்கும் மிரட்டல்
சில வேலைகளில் இந்த பணிகளை கண்காணிக்க வேண்டிய ரயில்வே அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டு தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தால் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம்; ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இந்த அதிகாரி லஞ்சம் கேட்கிறார் என்று மொட்டை கடிதம் எழுதி அவருடைய வேலைக்கு ஆப்பு அடித்து விடுகின்றனர். இந்த காரணத்தால் கண்காணிக்க வேண்டிய அதிகாரியோ அமைதியாகிவிடுகிறார்.
தொழிற்சங்கத் தலைவரின் அட்டகாசம்
ரயில்வேதுறை ஆவுட்சோர்சிங் செய்யப்படும் ஒப்பந்தங்களை பல அரசியல்வாதிகள், ரயில்வே தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஒருசில உயர் ரயில்வே அதிகாரிகள் பினாமி மூலமாக இந்த ஒப்பந்தங்களை எடுத்து விட்டு சப்காண்டிராக்ட் என ஒரு சில சிறிய தனியார் நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கின்றனர்.
எலிகள், கரப்பான், மூட்டைப் பூச்சிகள்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பிட்லைன்களில் முதன்மை பராமரிப்பு செய்யும் ரயில்களில் அதிக அளவு எலிகள், கரப்பான் பூச்சிகள், மூட்டை பூச்சிகள் காணப்படுகிறது என்று பயணிகள் அதிக அளவு புகார்கள் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில்; பராமரிக்கப்படும் வாரத்துக்கு 500 பெட்டிகள் பிட்லைன்களில் சுத்தம் செய்யும் போது ரயிலில் உள்ள அனைத்து குப்பைகள், மனித கழிவுகள், உணவு கழிவுகள் என அனைத்தும் ரயிலிருந்து சுத்தம் செய்து கீழே விழுகிறது. இவ்வாறு கொட்டும் கழிவுகளை உண்பதற்காக வேண்டி அனைத்து எலிகள் முதல் விஷ ஜந்துக்கள் வரை வருகின்றன். இவை பின்பு ரயிலில் ஏறி பயணிகளுடன் சேர்ந்து பயணம் செய்து இந்தியா முழுவதும் சுற்றி மீண்டும் நாகர்கோவில் வருகிறது.
மோசடியாக கணக்கு காட்டி
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள பிட்லைன்களை சுத்தம் செய்யும் தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐந்து பணியாளர்கள் ஒரு மேற்பார்வையாளர்களை நியமித்து தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடந்த ஆறு மாதகாலமாக அந்த தனியார் நிறுவனம் ஒரே ஒரு பணியாளரை கொண்டு வாரத்துக்கு ஒருநாள் அல்லது இரண்டு வாரத்துக்கு என்று தான் சுத்தம் செய்து ரயில்வேத்துறையிடமிருந்து தினசரி சுத்தம் செய்ததாக கணக்கு காட்டி அதற்கான கட்டணத்தை பெற்றுவிடுகிறது.
பரவும் தொற்று நோய்
தினசரி சுத்தம் செய்யவேண்டிய இடத்தை இவ்வாறு சுத்தம் செய்யாமல் இருப்பதால் ரயில்களின் அடியில் போய் பிரேக் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பராமரிப்பு செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. இது மட்டுமில்லாமல் இந்த கழிவுகளை உண்ண வேண்டி அதிகமான எலிகள் இங்கு வந்து பின்பு ரயிலில் ஏறி ஒளிந்து கொள்கிறது. நாகர்கோவிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் எலி போன்ற பல்வேறு ஜந்துக்கள் அதிக அளவு இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாக உள்ளது.
பினாமி தலைவர்
இந்த பிரச்சனையை திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே உயர்அதிகாரிகள் கவனத்துக்கு ரயில்வே பணியாளர்கள் கொண்டு சென்றார்கள். அவர்கள் இந்த சுத்தம் செய்யும் பணிகளை நாகர்கோவிலில் உள்ள ரயில்வே தொழிற்சங்க தலைவர் சார்ந்த ஒருவர் பினாமி பெயரில் எடுத்திருப்பதாகவும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார்கள்.
மோசடியான திட்டம்
இந்த நிலையில் திருவனந்தபுரம் கோட்ட முதுநிலை பொறியாளர் தனது சுற்று பயணத்தின் போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள பிட்லைன் மற்றும் அதைசுற்றிய பகுதிகள் இவ்வளவு மோசமாக சுத்தம் செய்யபடாமல் இருப்பதை பார்த்துவிட்டு தனியார் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்து இரண்டு கடிதங்கள் அனுப்பினார். ஆனாலும் அந்த தனியார் நிறுவனம் சுத்தம் செய்யும் பணிகளை செய்யவில்லை. கடைசியாக முதுநிலை பொறியாளர் கடந்த வாரம் 48 மணி நேர கெடு விதித்து எச்சரிக்கை கடிதம் அனுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத தனியார் நிறுவனம் தன்னுடைய சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவார்கள் என்று பயந்து ஓர் திட்டத்தை வகுத்தது. அதன்படி அவர்கள் கையிலெடுத்ததுதான் துய்மை இந்தியா திட்டம்.
தூய்மை இந்தியா திட்டத்தைப் பயன்படுத்தி
தனியார் நிறுவனம் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு அன்று வேலைக்கு அமர்த்தி தூய்மை இந்தியா திட்டத்தை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் செயல்படுத்துவது என்று தீர்மானித்து 27-05-2015 அன்று திட்டத்தை செயல்படுத்தினார்கள். இதன்படி அன்று பெயருக்கு ஒன்று, இரண்டு தனியார் நிறுவன ஊழியர்கள், ரயில்வே யார்டு ஊழியர்கள் மற்றும் அனைத்து ரயில்வே தொழிலாளர்கள் சேர்த்து அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று மிரட்டி கடந்த ஐந்து மாத காலமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த பிட்லைன்கள், ஸ்டேபளிங் லைன்கள் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை சுத்தம் செய்துவிட்டு பத்திரிகை நண்பர்களுக்கும் புகைப்படம் எடுத்து விட்டு துய்மை இந்தியா திட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டது என்று அறிக்கையும் விட்டு சென்றுவிட்டனர்.
பல லட்சம் வரிப்பணம் பாழ்
இவ்வாறு செய்துவிட்டு நாகர்கோவில் ரயில் நிலைய பிட்லைன்கள் சுத்தம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி ரயில்வே துறையிடமிருந்து பல லட்சம் கட்டணத்தையும் பெற்று விட்டனர். திருவனந்தபுரம் கோட்ட முதுநிலை பொறியாளரது கட்டளையின்படி நாகர்கோவில் ரயில் நிலைய பிட்லைன் பகுதி சுத்தம் செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் அவர் வாயையும் அடைத்து விட்டாகி விட்டது. இவ்வாறு ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தாகிவிட்டது.
கடும் நடவடிக்கை தேவை
இந்த பிரச்சனையில் ரயில்வே துறையின் விஜிலென்ஸ் விசாரணை செய்து இதில் சம்மந்தபட்ட ரயில்வே அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யாமல் ஏமாற்றும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இது மட்டுமில்லாமல் இந்த நிறுவனம் இனிமேல் எந்த ஒரு ரயில்வேயின் ஒப்பந்தத்திலும் கலந்து கொள்ள கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்என்று ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.