விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் பெரும் விரிசல்... பெரும் விபத்து தவிர்ப்பு
விழுப்புரம்:விழுப்புரம் அருகே சின்னன்குளம் என்ற இடத்திற்கு அருகே ரயில் தண்டவாளம் துண்டானது. உரிய நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விழுப்புரம் அருகே சின்னன்குளம் என்ற கிராமம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முக்கிய பாதையாக இந்த பாதை உள்ளது.
நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வழக்கம் போல ரயில்கள் புறப்பட்டன. அப்போது முன்னதாக புறப்பட்ட ஒரு ரயில் இந்த இடம் அருகே வரும் போது ரயில் தண்டவாளம் துண்டான காட்சியைக் கண்டுள்ளார் அந்த ரயிலின் ஓட்டுனர்.
இதையடுத்து அவசரம் அவசரமாக ரயில் வேகத்தை குறைத்த ஓட்டுனர் ரயிலை சாதுரியமாக இயக்கி அந்த பகுதியைக் கடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுக் குறித்து அவர் வயர்லெஸ் ,மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இந்த பணியை சரிபார்க்க பணியாளர்கள் விரைந்து வந்தனர். சிலமணி நேரம் போராடி தண்டவாளத்தின் இரு புறத்திலும் இணைப்புக்கள் பொருத்தினர்.
இந்த சம்பவம் காரணமாக சென்னையில் இருந்து நேற்று இரவு தென்மாவட்டங்களுக்கு புறப்பட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நள்ளிரவில் நடுவழியில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
2 மணி நேரத்திற்குப் பின் அனைத்து ரயில்களும் சரி செய்யப்பட்ட தண்டவாளத்தில் இயக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.