குரூப்-2 தேர்வில் கலந்து கொள்ள மதுரை திருநங்கைக்கு அனுமதி: டி.என்.பி.எஸ்.சி தகவல்
சென்னை: குரூப்-2 தேர்வில் 'பெண்' என்ற அங்கீகாரத்துடன் திருநங்கையை அனுமதித்து, அவருக்கு ஹால்டிக்கெட் வழக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட்டுக்கு டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
மதுரை, ஆண்டாள்புரத்தை சேர்ந்த 23 வயது சுவப்ணா என்ற திருநங்கை, சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அடிப்படை உரிமை வழங்குகிறது. ஆணாக பிறந்து, பின்னர் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களால் திருநங்கைகளாக மாறும் எங்களை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே, திருநங்கைகளுக்கு சமவாய்ப்பு வழங்கும் விதமாக, கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், எங்களது பள்ளி சான்றிதழில் ஆண் என்றும், அதன்பின்னர் திருநங்கையானதும், பெண் என்றும் எங்களது ஆவணங்கள் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப்-2 தேர்வினை வருகிற டிசம்பர் 1-ந் தேதி நடத்துகிறது.
பி.ஏ. பட்டதாரியான நான் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். ஆனால், என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்த விபரம் தெரியவில்லை. இதுவரை எனக்கு ஹால் டிக்கெட்டும் வரவில்லை.
எனவே குருப்-2 தேர்வில், என்னை பெண் என்ற பிரிவின் கீழ் தேர்வு எழுத அனுமதிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு உத்தரவிட வேண்டும், எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்வப்னாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் சி.என்.ஜி.நிறைமதி, மனுதாரர் சுவப்ணாவின் விண்ணப்பம் குரூப்-2 தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கியுள்ள ‘ஹால்டிக்கெட்' நகலை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
எனவே, இது சம்பந்தமாக மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. அதே நேரம், 3 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை மனுவுக்கு, தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சி.யும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்' என இவ்வாறு உத்தரவிட்டனர்.