29 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை... 20 பேருக்கு பசுமை வீடு... கலக்கும் கரூர் மாவட்டம்
கரூர்: தமிழகத்திலேயே முதன்முதலாக கரூர் மாவட்டத்தில் 29 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி அதில் 20 திருநங்கைகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்- என்ற வள்ளுவத்திற்கிணங்க- என்பது வள்ளுவர் வாக்கு. இதன்படி, கரூர் மாவட்டத்தில் திருநங்கையருக்கு பசுமை இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து பொருளாதார முன்னேற்றம் பெறும் வகையில் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது தமிழக அரசு. அதிலும், திருநங்கையர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திடும் வகையிலும் சமுதாயத்தில் சரிநிகராக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
44 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசி ஊராட்சியில் நான்கு ஆண்டுகளில் 44 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கி இரண்டு சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்தில் ரூ.10 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
29 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை
மேலும், தமிழகத்திலேயே முதன்முதலாக 29 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி அதில் 20 திருநங்கைகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. மற்ற பயனாளிகளுக்கு விரைவில் பசுமை வீட்டுத்திட்டத்தில் வீடு கட்டி வழங்கப்படும்.
கலெக்டர் ஜெயந்தி
மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தற்பொழுது ரூ.1இலட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று தெரு விளக்குகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி தெரிவித்தார். கலெக்டர் மேலும் கூறுகையில், திருநங்கையர்களின் வளர்ச்சிக்காக மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவிகள் மேற்கொள்ள திட்டமிட்டு அரசு உத்தரவுப்படி திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் 44 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.
சுய உதவிக் குழுக்கள்
அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டு அதில் இரண்டு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சமூக நலத்துறையின் மூலமாகவே தொழிற்பயிற்சி வழங்கியதுடன் அரசு மானியத்தில் இரண்டு குழுக்களுக்கும் தலா 5 இலட்சம் வீதம் வங்கிக்கடன் வழங்கி தற்பொழுது பாத்திரக்கடை, பெட்டிக்கடை, பால்வியாபாரம், கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்பு மையங்கள் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆளுக்கு 4 ஆடுகள்
மேலும் முதலமைச்சர் அவர்களால் அறிவித்து வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் ஒன்றான விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் 1 பயனாளிக்;கு 4 ஆடுகள் வழங்கப்பட்டு இதன் மூலம் 20 ஆட்டுக்குட்டிகள் ஈன்று நல்ல முறையில் பாதுகாத்து வருகிறார். மற்ற விருப்பமுள்ள பயனாளிகளுக்கு விரைவில் ஆடுகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து வரும்.
மருத்துவ காப்பீடு
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 44 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டு அதன் மூலம் 2 பயனாளிகள் உயர் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளார்கள். மேலும் இதுவரை 9 திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சமுதாயத்தில் திருநங்கையர்களின் பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து விளங்கி சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அரசு அனுமதியுடன் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது என ஜெயந்தி தெரிவித்தார்.
மணவாசி சுஜாதா
மணவாசி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை சுஜாதா தெரிவிக்கையில், நான் இங்கு வசித்து வரும் திருநங்கையர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு குழு அமைத்து தலைவியாக செயல்பட்டு எங்கள் சகோதரிகளுக்கு தேவையான உதவிகள் தொடர்பான மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து "அம்மா" அவர்களின் கருணையோடு நலத்திட்டங்கள் பெற்று மிக நல்ல முறையில் இருக்கிறோம். எங்களைப் பொருத்தவரை பெற்றோர்கள், உறவினர்களால் ஏன் சமுதாயமே ஒதுக்கி வைத்த நிலையில் ஏன் உயிரோடு வாழ வேண்டும் இறந்து விடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் என்னைப் போன்ற பலரின் நிலையை அறிந்த "அம்மா" அவர்கள் கருணை உள்ளத்தோடு எங்களையும் சமுதாயத்தில் சரிசமமாக வாழ முடியும் என்ற நிலையை மாற்றி எங்களின் தேவையை கருணையோடு கேட்டு எங்களுக்கு கேட்ட உதவிகளை செய்து இன்றைக்கு நாங்கள் உயிருடன் சரிசமமாக வாழ்கிறோம் என்றால் அதற்கு முழு காரணம் அம்மாதான்.
சுயமாக வாழ முடிகிறது
என்னைப் போன்றவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி சுயதொழில் தொடங்க வங்கியின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அதனடிப்படையில் சுயமாக பொருளாதாரத்தை பெறுகின்ற நிலையை பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி எங்களுக்கு குடும்ப அட்டை வழங்கி நியாய விலைக்கடையில் பொருட்கள் பெற்று வருகிறோம். தற்பொழுது வாக்காளர் அடையாள அட்டை வழங்கி நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து வருகிறோம் என்றால் இதை விட வேறு என்ன வேண்டும் என்றார்.
தாயுள்ளத்துடன்
மணவாசி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை சிநேகா தெரிவிக்கையில் சமுதாயத்தில் எங்களை புறம்தள்ளி கேலிப்பொருளாக பார்த்து வந்த உலகத்தில் எங்களது வாழ்க்கையில் வெளிச்சமே வராதா என்று ஏக்கத்தோடு வாழ்ந்த நிலையில் எங்கள் முன்னே கடவுளாக முன்நின்று அம்மா அவர்கள் நானிருக்கிறேன் உங்களைப் பாதுகாக்க என்று எங்களை தாயுள்ளத்துடன் அரவணைத்தார். எங்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்ய நினைப்பார்களோ அதையெல்லாம் எங்களுக்கு செய்திட உத்தரவிட்டு அதன்படி எங்களுக்கு அடையாள அட்டை வழங்கியதுடன் வசிப்பதற்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கி அதில் வீடும் கட்டி எங்களை தங்க வைத்து அழகு பார்த்தார். மேலும் எங்களுக்கு சுயதொழில் செய்து பொருளாதாரம் முன்னேற்றம் பெறச் செய்ய வங்கியின் மூலம் கடனுதவி பெற்றுத் தந்து நான் மட்டுமின்றி என்னைப்போன்ற சகோதரிகள் அனைவரும் இன்றைக்கு சொந்த வீட்டில் வாழ்ந்து வருவதுடன் சுயமாக தொழில் செய்து சமுதாயத்தில் எங்களை சரிநிகராக தலை நிமிரச் செய்த தங்க மனம் கொண்டவர் என்று கூறினார்.