மார்ச் 2ம் தேதி பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை: அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார். தொழிலாளர்களின் மனம் நிறைவு பெறும் அளவுக்கு ஊதிய ஒப்பந்தம் இருக்கும் எனவும் செந்தில்பாலாஜி உறுதி அளித்தார்
சட்டசபையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் உலகநாதன் பேசும்போது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடைய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருந்தது திமுகவின் தொமுச பேரவைதான். 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அவர்களுடைய தொழிற்சங்கத்தினரை மட்டும் வைத்து ஊதிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது.இந்த ஆண்டு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசுவதற்கு தொமுச சார்பில் கடிதம் கொடுக்கப்படவில்லை. அனைத்துச் சங்கங்கள் கொடுத்த நிர்பந்தத்துக்குப் பிறகே, அது தொடர்பான கடிதத்தை தொமுச கொடுத்தது. அந்தக் கடிதம் வழங்கிய பிறகு அரசால் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட 41 தொழிற்சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் தொடர்பாக துறை சார்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மார்ச் 2 ஆம் தேதி ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை தடைபட வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மைதான் திமுகவுக்கு இருக்கிறது.
மார்ச் 2 ஆம் தேதி நிச்சயம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். திமுக ஆட்சியில் ஒரு குழு அமைக்கப்பட்டு 38 நாள்கள் கழித்துத்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தையே தொடங்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு முதல் என்ன நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ, அதே நடைமுறை விதிகளைப் பின்பற்றி, தொழிலாளர்களின் நலனைக் காக்கும் வகையில்தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் 6 முறை கூட பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகுதான் ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் மத்தியில் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த வேண்டும், பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கருத்தை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
மக்கள் சக்தியை இழந்த திமுக ஒரு நாளும் தொழிலாளர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, குறிப்பிட்ட தேதியில் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும். தொழிலாளர்களின் மனம் நிறைவு பெறும் முறையில் ஊதிய ஒப்பந்தத்தை அரசு ஏற்படுத்தும்" என்றார்.