ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் இருந்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் விதமாக கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அறிவுறுத்தலின்படி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், கடந்த ஆண்டு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டுமெனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.