பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சென்னை: சென்னை போக்குவரத்து துறையின் தலைமையிடமான பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஊதிய உயர்வு, 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த போராட்டம் . இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை போக்குவரத்து துறையின் தலைமையிடமான பல்லவன் இல்லம் முன்பு திரண்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.