போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த கோரிக்கை – ஏப்ரலில் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் 50 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 10 ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் 14 பேர் கொண்ட குழுவினரும், தொழிலாளர்கள் தரப்பில் 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு குறித்து பேசப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டம் தங்களுக்கு பலன் அளிக்காது என்றும், 50 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.