திருச்சி திமுக பிரமுகர் படுகொலை – பதட்டத்தினை தவிர்க்க போலீஸ் குவிப்பு
திருச்சி: திருச்சியில் திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார்கோவில் கிராமம் பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மருது மகன் சக்திவேல். தி.மு.கவை சேர்ந்த இவர் பிச்சாண்டார்கோவில் ஊராட்சிமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் நொச்சியம் மதுக்கடையில் அமர்ந்திருந்தபோது சக்திவேல் தரப்புக்கும் அவர்களுடன் முன் விரோதம் கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் தனித்தனி வழக்கு பதிவு செய்து இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சக்திவேல் நேற்று இரவு 9 மணி அளவில் நொச்சியத்தில் உள்ள மதுக்கடை பாருக்குச் சென்றிருந்தார். அப்போது சக்திவேலுவும் அவரது நண்பர் ராஜேந்திரன் என்பவரும் மது அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் அங்குள்ள வாய்க்கால் கரைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த முசிறி பிரவீன் என்கிற பிரவீன்நாத், பிச்சாண்டார் கோவில் ஆனந்த் நகர் சுந்தரபாண்டி மற்றும் நான்கு பேர் சக்திவேலை மோட்டார் சைக்கிளை வழி மறித்து உருட்டுக்கட்டையால் தாக்கினர். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரது முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இக்கொலைச் சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திமுக பிரமுகர் கொலையால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.