திருச்சி தோட்டா தொழிற்சாலை வெடிவிபத்து.. தானாக முன்வந்து விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு
திருச்சி தோட்டா தொழிற்சாலை ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தாமாகவே முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது.
சென்னை: திருச்சி துறையூர் தோட்டா தொழிற் சாலையில் நடந்த விபத்து குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒரு அலகில் நேற்று திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இங்கு வெடி பொருட்கள், தோட்டா தயாரிக்கும் 15 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஒரு அலகில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 18 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருச்சியை சேர்ந்த வக்கீல் முத்து கிருஷ்ணன் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் திருச்சி துறையூர் தோட்டாத் தொழிற்சாலையில் நடந்த விபத்து குறித்து மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக மனுதாரரே பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.