திருச்சி கைதி புனேவில் தப்பியோட்டம்- "மூச்சா" போவதாக கூறி விட்டு எஸ்கேப் ஆனார்!
திருச்சி: திருச்சியில் இருந்து புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் அங்கிருந்து ரயிலில் திரும்பும் போது இன்று காலை திடீரென்று தப்பி ஓடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபரின் பெயர் தவமணி. இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளை புனேவில் வைத்து போலியாக அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில் விட்டதாக புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர். இதுதொடர்பான வழக்கு புனேவில் நிலுவையில் உள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் இவர் மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகளும் உள்ளன. இது தொடர்பாக இவர் திருச்சி சிறையில் கடந்த 2 வருடமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் புனே வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை முடிந்து திரும்பிய நிலையில்தான் போலீசாரின் கண்களில் மண்ணைத்தூவும் வகையில் கனநேரத்தில் தப்பி ஓடியுள்ளார் கைதி தவமணி.
வழக்கு விசாரணை முடிவடைந்து சோலாப்பூர் - குல்பர்கா மின்சார ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் ரயில் வேகம் குறைந்துள்ளது. அச்சமயத்தில் பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற தவமணி, திடீரென்று வெளியில் குதித்து ஓடிவிட்டார். தற்போது அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகின்றது.